துறை #1

வளரிளம் பருவம் (Adolescence)

இளைஞர்களைத் தற்கொலைப் பாதையிலிருந்து காப்பாற்ற பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

(20200129 இந்து - தமிழ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரை)

சில நாட்களுக்கு முன்பு, தலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று, தாய் முடிவெட்டிவிடச் சொன்னதால், பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி செய்திகள் வெளியாகின. அதைப் பற்றிய தகவல்கள் மனதைப் பிய்த்தன: ‘கணவனைப் பிரிந்து ஒரே மகனுடன் வாழும் தாய், மகனும் தற்கொலை செய்துகொண்டதால் தனி மரமானார்’. அந்தத் தாயின் துயரத்துக்கு நடுவே, இன்றைய ஆராய்ச்சிகள் சொல்லும் உண்மைகளும் முக்கியம்: இது தலைமுடி பற்றிய விஷயம் இல்லை. வீட்டின் உத்திரத்தில் அம்மாவின் புடவையில் தொங்கியது ஒரு சின்னப்பையனின் உடல் இல்லை. ஒரு முழு மனிதனாகத் தன்னை உருவாக்கிக்கொண்டிருந்த, தன் வாழ்வின் முடிவுகளைத் தானே எடுக்க விரும்பிய, அதற்கான வளர்ச்சிப் படியில் இருந்த ஒரு வளரிளம் பருவத்து உடல்.

வளரிளம் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே பிளவும் பூசலும் புதிதில்லை. ஆனால், இன்றைய சூழலில் இவற்றின் விளைவுகள் ஆழமானவை. இவை பற்றிய அக்கறையும் உளவியல் ஆராய்ச்சிகளும் இப்போது அதிகரித்துவருகின்றன. பிள்ளைகள் சண்டைபோடுவது அவர்களின் தனிப்பட்ட போர். அது பெற்றோர்களின் கட்டுப்பாடு பற்றிய விஷயமே இல்லை. பெரும்பாலும் பெற்றோர்களுடன் இருப்பதால் இப்படி ஒரு தோற்றம் உருவாகிவிடுகிறது என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளரும் கல்வியாளருமான கரன் ரெய்ன்.

சுயம் தேடும் பயணம்

வளரிளம் பருவம் என்பது ஒரு பையனோ பெண்ணோ தன்னுடைய சுயஅடையாளத்தைத் தேடும் ஒரு பயணம். அதில் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, பெற்றோர்கள், குடும்பம், நண்பர்கள், அசட்டுத் துணிச்சல், சமூக எதிர்ப்பு, பொழுதுபோக்கு, போதை, கனவுகள், குழப்பங்கள் என்று நிறைய கூறுகள் இருக்கின்றன. பிரச்சினைகளில் இளைஞர்களின் பார்வையில் முக்கியமாக இருக்கும் பல விஷயங்களை நாம் பார்ப்பதே இல்லை என்கிறார்கள் ‘அடோலெசென்ஸ்: ஹவ் டு சர்வைவ் இட்’ புத்தகத்தை எழுதிய கல்வியாளர் டோனி லிட்டில், உளவியல் நிபுணர் ஹெர்ப் எட்கின்.

அந்தப் பையனைத் தரதரவென்று இழுத்துச் சென்று சலூனில் அமர்த்தி முடிவெட்டியபோது வெறும் தலைமுடிதானா கீழே விழுந்தது? எக்குத்தப்பாக வளர்ந்துகொண்டிருக்கும் தனது உடல் தோற்றத்தின் மீது அந்தப் பையனே வைத்திருந்த மரியாதை விழுந்தது. அவனை அவனது நண்பர்கள் கேலிசெய்து தள்ளிவைக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை விழுந்தது. ஒருசில பெண்களாவது அவனை ஒரு வளர்ந்த ஆண்மகனாகக் கருதுவார்கள் என்னும் கனவு விழுந்தது. யார் புரிந்துகொள்ளாமல் போனாலும் தனது உணர்வுகளைத் தன் குடும்பம் புரிந்துகொள்ளும் எனும் உறுதி விழுந்தது. ‘நான் இனியும் சின்னப் பையன் இல்லை, எனது வாழ்வின் சில முடிவுகளையாவது நானே எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டேன்’ என்று அவன் நினைத்திருந்த பிம்பம் விழுந்தது. இன்னும் அந்த வளரிளம் பருவம் என்னும் நெடுகிய சூறாவளியில் அவன் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளுக்கு அவன் மனதில் உறுதுணையாக இருந்த பல விஷயங்களும் அன்று விழுந்தன. இது தலைமுடி பற்றிய விஷயமில்லை.

இரண்டு நிகழ்வுகள்

சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த, எனக்கு நன்கு தெரிந்த ஒரு இந்திய இளைஞனைப் பற்றிய விஷயத்தைச் சொல்கிறேன். அவன் திடீரென்று தலைமுடியை வாருவதை நிறுத்திவிட்டான். தலைமுடியை வெட்டுவது பற்றிய கேள்வியே இல்லை. அவனது பெற்றோர்கள், ‘பிள்ளைகளின் தற்காலிகமான, சட்டப்படி தவறில்லாத விஷயங்களில் தலையிடுவதில்லை’ என்னும் வழக்கம் உடையவர்கள். அவனது பள்ளியில் இது ஒரு தனிமனித விஷயம் என்று விட்டுவிட்டார்கள். மேலும், அவன் ‘நானொரு இசைக் கலைஞனாகப் போகிறேன்’ என்று கிடாரை எடுத்துக்கொண்டு சுற்றியதும் கூடுதல் பலமாக இருந்தது. ஆனாலும், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குக் கத்தரிக்கோல், சீப்பு பார்க்காத ஒரு தலை என்பது அந்தப் பள்ளியிலேயே, ஊரிலேயே, விநோதமாகத்தான் இருந்தது. ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இப்போது அவன் ஓரளவு பிரபலமான முழுநேர இசைக் கலைஞன். அவன் தலைமுடி அழகாக வெட்டப்பட்டு, முகத்தில் விழாமல் வாரப்பட்டிருக்கிறது. ‘ஏம்பா இப்போ மட்டும் இப்படி?’ என்று தெரிந்தவர்கள் கேட்கும்போது,, ‘என் காதலிக்கு இதுதான் பிடித்திருக்கிறது’ என்கிறான். இதுவும் தலைமுடி பற்றிய விஷயமில்லை.

சமீபத்தில் நடந்த இன்னொரு நிகழ்ச்சி. என் நண்பருக்கு இரண்டு பையன்கள், கடைக்குட்டியாய் ஒரு பெண். திடீரென்று அவரது பெண் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும் என்றாளாம். பெற்றோருக்கோ அதிர்ச்சி. மகளோ, ‘எனக்குப் பிடித்திருக்கிறது. நான் அழகாக இருப்பேனா, பள்ளி நண்பர்கள் கிண்டல் செய்வார்களா என்பதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அடம்பிடித்தாளாம். இவர்கள் வேண்டாவெறுப்பாய் ஒப்புக்கொள்ள, மொட்டை அடித்துக்கொண்டு வந்துவிட்டாள். இரண்டு நாட்கள் கழித்து, ‘சீக்கிரத்தில் கிராப் போல முடி வளர்ந்துவிடும். அண்ணன்களுக்கு அனுமதி கொடுத்தாலும் கொடுப்பீர்கள், எனக்கு நிச்சயம் நீங்கள் அனுமதி கொடுக்கவே மாட்டீர்கள் என்று நினைத்தேன்’ என்றாளாம். இதுகூடத் தலைமுடி பற்றிய விஷயமில்லை.

பெரியவர்கள் என்ன செய்யலாம்?

ஆணோ பெண்ணோ, வளரிளம் பருவத்தினர் ‘இளம் மனிதர்கள்’ என்பதை இந்தியச் சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதையும், அவர்களின் அடிப்படை உணர்வுகளை மதிக்கத் தவறுவதையும் தனது ‘அடோலெசென்ஸ் இன் அர்பன் இந்தியா’ என்னும் புத்தகத்தில் நிறுவுகிறார் பரோடா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஷகுஃபா கப்பாடியா. சமூகக் கட்டுப்பாடுகள் மிக அதிகமாக இருக்கும்போது, வளரிளம் பருவத்தினர் தங்களுக்கான சுயஅடையாளத்தைத் தேடுவதும் தக்க வைத்துக்கொள்வதும் மிகச் சிரமமாக இருக்கிறது. இந்தச் சிரமம், தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்குப் போகாமல் இருக்க இளைஞர்களும் பெரியவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய பல வழிமுறைகளை உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

முதல் விஷயம், ‘நம் பெண்ணோ பையனோ இப்படிச் செய்ய மாட்டார்கள்’ என்ற தவறான நம்பிக்கையில் இருக்காதீர்கள். உலகெங்கும் இளைஞர்களின் மரணத்துக்கான காரணங்களில் தற்கொலை மூன்றாவது இடத்தை வகிக்கிறது. பிள்ளைகளின் வாழ்வில் திடீரெனப் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அவர்களின் நடவடிக்கையில் - ரொம்பவும் கவலையுடன் இருப்பது, வெளி நடமாட்டத்தைக் குறைத்துக்கொள்வது, பசி தூக்கமின்றித் தவிப்பது என்பதுபோல - சில அபாயக்குறிகள் தெரியலாம். இதையெல்லாம் பெற்றோர்தான் உடனடியாகக் கவனிக்க முடியும். இளைஞர்களுடன் தொடர்ந்து உரையாடுவதும் அவர்களின் சின்னச்சின்ன நல்ல காரியங்களை வாயாரப் பாராட்டுவதும் விளையாட்டுகள் போன்ற ஊக்கம் தரும் விஷயங்களில் அவர்களை ஈடுபடுத்துவதும் பெரியவர்கள் செய்யக்கூடிய காரியங்கள்தான். அவர்களின் சுதந்திரத்தில் ரொம்பவும் மூக்கை நுழைக்காமல், பிள்ளைகள் யாருடன் பழகுகிறார்கள் எந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையெல்லாம் கருத்தாகக் கவனிக்க வேண்டியதும் அவசியம்.

நம் பிள்ளைகளுடன் பேசலாம். குற்றஞ்சாட்டாமல், இடித்துரைக்காமல், அவர்களின் மீதுள்ள வாஞ்சையால் வரும் அக்கறையைச் சொல்லாம். ‘எனக்கு உன் பிரச்சினைகளை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது’ என்பது போன்ற தனிப்பட்ட நேரடியான உத்தரவாதங்களைத் தரலாம். ‘உன்னுடைய வளரிளம் பருவம் என்னும் சூறாவளியில் உன்னையே நீ அடையாளம் கண்டு உருவாக்கிக்கொள்ளும் பயணத்தில் உனக்குத் துணையாக நான் இருக்கிறேன்’ என்பதுதான் நாம் நம் இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய உறுதி. இந்தப் பயணத்தில் அவர்கள் சினிமாவுக்கோ தூங்கும் நேரத்துக்கோ தலைமுடிக்கோ உங்களுடன் தகராறு செய்யலாம். அது சினிமா பற்றிய, தூக்கம் பற்றிய, தலைமுடி பற்றிய விஷயம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

-பயணி தரன்

* * * * * * *

நன்றி: இந்து - தமிழ் திசை

நெடுகிய சூறாவளி: வளரிளம் பருவத்தினரிடம் பழக பயனுள்ள பத்து விஷயங்கள்

வாழ்க்கையில் ‘டீன் ஏஜ்’ காலகட்டம் ரொம்ப அநியாயம். ஒரு நிமிஷம், “ரெண்டு கழுதை வயசாச்சு, இது கூடத் தெரியாதா?” என்று கேட்கும் வீட்டுப் பெரியவர்கள், அடுத்த நிமிஷமே, “மொளச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ளே பெரிய இதுன்னு நெனப்பா மனசுல?” என்றும் கேட்பார்கள். எப்போதுமே மிகவும் அவதிக்குள்ளாகும் ஒரு வளர்ச்சியின் கட்டமாக adolescence என்கிற வளரிளம் பருவத்தைச் சொல்லுவார்கள் (1904லேயே ஒரு அறிஞர் இதை ‘சூறாவளியும் அழுத்தமும்’ என்று விவரித்தார்). ஆனால், மிகமிகமிக வேகமாக மாறிவரும் தற்கால உலகில், ‘நிதானமான’ பருவத்தில் இருப்பவர்களே நிலைதடுமாறும் சூழல். இந்த அதிவேகமாய் மாறும் உலகில், எப்போதுமே தங்களுக்குள் சூறாவளியும் அழுத்தமும் கொண்ட ‘அடலசன்ஸ்’ பருவத்தினரின் கதி என்ன? இந்தப் புது உலகின் வளரிளம் பருவத்தினரிடம் பழக புதிய புரிதல்கள் எதுவும் நமக்கு வேண்டாமா?

இப்போது இந்தத் துறையில் பல ஆராய்ச்சிகளும் புதிய நிதர்சனங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மனோதத்துவ நிபுணர்களும் அறிவியல் அறிஞர்களும் முன்வைக்கும் கருத்துக்கள் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உதாரணமாய், தலையாய பிரச்சனையான மொபைல் போன் விஷயத்தில், "ரொம்ப தூங்கற பசங்களை ‘தலைகாணிப் பழக்கத்துக்கு அடிமை'ன்னு சொல்லுவீங்களா? அவங்க போனுக்கு அடிமை இல்லை. உங்க காலத்தில் நீங்க டீக்கடையில் அரட்டை அடிச்ச மாதிரி தான் இப்போ அவங்க போனில் அரட்டை அடிக்கறாங்க. ஆனா, அதுக்கு ஒரு வகையில நீங்களும் காரணம்” என்று ஆரம்பிக்கிறார்கள் இன்றைய அறிஞர்கள். நான் இந்தத் துறை பற்றிப் படித்த நூல்களிலிருந்து மனோதத்துவ நிபுணர்களும் அறிவியல் அறிஞர்களும் முன்வைக்கும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்ற பத்து விஷயங்களை இங்கே பார்ப்போம். (‘ஒரு கப்பல், நூறு துறைமுகங்கள்’ நூலிலிருந்து உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் முன்னோட்டம்.)

1. தலையாய விஷயத்தை முதலில் பார்த்துவிடுவோம்: மொபைல் போன். உங்கள் குழந்தைகள் அதிகம் தூங்கினால் ‘தலைகாணி பழக்கத்துக்கு அடிமை’ என்று சொல்லுவதில்லை. அவர்கள் நண்பர்களுடன் உரையாடுவதை ‘மொபைல் போனுக்கு அடிமை’ என்று சொல்லாதீர்கள். (அவர்கள் ‘எப்பப் பாத்தாலும் போனை நோண்டிக் கொண்டிரு’ப்பதில்லை. அவர்கள் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.) “ஏன் போனில் அரட்டை அடிக்கணும்? எங்க காலத்திலே...” என்று ஆரம்பிக்கப் போகிறவர், அடுத்த விஷயத்தைப் பார்க்கவும்.

2. முன்பு பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே போனால், அவர்கள் திரும்பி வரும்வரை அவர்கள் மேல் பெரியவர்களின் ஆதிக்கம் இருக்காது. கடை, ஏரி, கம்மாய் என்று எங்கும் திரியலாம். ஆனால், இப்போது பிள்ளைகளின் போக்குவரத்து பற்றிய பெற்றோர்களின் கட்டுப்பாடு மிகமிக அதிகம். இது நமக்கு உறைப்பதில்லை. அதனால், இளைஞர்களுக்கு போனில் அரட்டை அடிப்பது வசதியாக இருக்கிறது.

3. இணையத்தளத்தில் இந்த இளைஞர்கள் அரட்டை அடிப்பதும், பெரியவர்கள் முந்தைய காலத்தில் டீக்கடையில் நின்று அரட்டை அடிப்பது போலத்தான். ‘It’s Complicated’ என்னும் நூலில் Danah Boyd இந்த இணையச் சூழல்களை Networking Publics - தொடர்புக்கான பொது இடங்கள் - என்று வகைப்படுத்துகிறார். உங்களுக்கு மைதானம். அவர்களுக்கு மொபைல் போன்.

4. முன்பெல்லாம் குழந்தைப் பருவம் > வளரிளம் பருவம் > 18க்கு மேல், வளர்ந்த பருவம் என்று எளிமையாகப் புரிந்துவைத்திருந்தோம். ஆனால், கொஞ்சம் நிதானமாகப் பாருங்கள். இந்தக் காலத்தில் முன்பைவிடக் கூடுதலாய் எத்தனை வருடங்கள் படிக்க வேண்டியிருக்கிறது? காலேஜ் முடித்தவுடன் கல்யாணம் என்கிற காலண்டரும் காலாவதியாகிவிட்டது. இந்த 18 முதல் 25–ஏன், சமயங்களில் 30 கூட–வயது வரை இருப்பவர்கள் ‘டீன் ஏஜ் பசங்க’ இல்லை. அவர்கள் முந்தைய கணக்குப்படி ‘வளர்ந்த பெரியவர்க’ளும் இல்லை. இதை 'வெளிவரும் வளர்ந்த பருவம்' - emerging adulthood - என்று மனோதத்துவ நிபுணர்கள் அழைக்கிறார்கள். இந்தக் காலத்தில், இந்த வயதினரை எப்படி அணுகுவது என்பதை நாம் யோசித்திருக்கிறோமா?

5. முன்பு நாம் சாப்பிட்ட உணவை இன்று அவர்கள் சாப்பிடுவது இல்லை. அதிக ஊட்டச்சத்து உள்ளே போகிறது. அறிவுக்கும் பலமான விருந்து கிடைக்கிறது. ஆகவே, இன்றைய இளைஞர்கள் மிக எளிய வயதில் வளரிளம் பருவத்தை எட்டி விடுகிறார்கள். மிகவும் காலம் தாழ்ந்துதான் அதிலிருந்து வெளியே வருகிறார்கள். இது நீண்ட சிறைவாசம். நெடுகிய சூறாவளி. மற்றவர்கள்தான் புரிந்து நடக்கவேண்டும்.

6. வளரிளம் பருவத்தினர் அவர்களின் அம்மா அப்பாவிடம் முரண்படுவது பெற்றோர்களின் அடக்குமுறையை எதிர்த்து என்றுதான் பெரும்பாலும் புரிந்துகொள்கிறோம். ஆனால், அது அப்படியில்லை. அந்த இளைஞர்களுக்குத் தங்களது உரிமை பற்றிய சுய சிக்கல் இருக்கிறது. அவர்கள் சூழலுடன் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் சூழலில் பெரும்பாலும் பெற்றோர்கள் இருப்பதால்(தான்) பெற்றோர்களிடமும் போராடுகிறார்கள்.

7. அப்படியானால், விதிமுறைகள் எதுவும் வேண்டாமா? தான்தோன்றித்தனமாய் விட்டுவிட முடியுமா? முடியாது. ஆனால், இளைஞர்களின் சொந்த உணர்வுகளை மையமாக வைக்காத எந்த கட்டுப்பாடும் எதிர்ப்பைத்தான் கிளப்பும். முதல் கேள்வியாக, “உனக்கு என்ன தோணுதும்மா?” என்று ஆரம்பியுங்கள். கேட்டுவிட்டு “நான்தான் சொல்லிட்டேன்ல, போ, போய் சொன்னபடி செய்” என்று முரண்டு பிடிக்காதீர்கள்.

8. இந்த இளைஞர்களின் சுய மரியாதையை நாம் எல்லோரும் சேர்ந்துதான் தீர்மானிக்கிறோம் என்று சமீபத்திய சமூக அறிவியலின் கண்டுபிடிப்புகள் சொல்லுகின்றன. ஒரு சமூகம் வளரிளம் பருவத்தினரை மதிக்கும் சமூகமாக இருந்தால், அவர்களும் சுய மரியாதையுடன் மதிக்கும்படி நடந்துகொள்கிறார்கள். சமூகம் இழிவாக நடத்தினால், அவர்களின் சுய மரியாதையும் குறைவாக இருக்கிறது. ஒரே வயதைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வேறுவேறு அளவில் தங்களை எடை போடுகிறார்கள். காரணம், அவர்கள் இல்லை. நாம். இரண்டு வீடுகளுக்குள்ளும் இது வேறுபடலாம். இது, பெரியவர்களைப் பொறுத்தது.

9. வளரிளம் பருவத்தினரின் நடையுடை பாவனைகளைக் கிண்டல் செய்யாதீர்கள். நிஜமாகவே அவர்களின் உடலில் சில விஷயங்கள் சரியில்லை. அவர்கள் நெட்டையும் கோணலுமாய் உணர்வதும், தங்களின் உடலைப் பற்றி சந்தேகம் கொள்வதுமாய் அழுத்தத்தில் இருக்கிறார்கள். காரணம் வெறும் மனநிலை இல்லை. நிஜமாகவே அவர்களின் உலகில் கீழ்ப்பகுதி வேகமாக வளர்கிறது. மேல்பகுதி மெதுவாக வளர்கிறது. ஒரு வகையில் பொய்க்கால் குதிரையின் ஆட்டம் போல, அவர்களின் உடம்பே கொஞ்சம் தடுமாறி, நிலைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை அவர்கள் சரிசெய்ய முடியாது. சமாளிக்க வேண்டும்.

10. வளர்ந்த மனிதர்களுக்கும் பல்வேறு விதமாக நண்பர்கள் உண்டு. நாம் வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை விட்டுவிடுகிறோம். இது வளர்ந்த பிறகு வரும் மனநிலை. அது வளரிளம் பருவத்தினருக்குக் குறைவாகத்தான் இருக்கிறது. அறிவியலில் இதை Resistance to Peer Influence (RPI) - சகர்களின் தூண்டுதல் செல்வாக்கை எதிர்க்கும் திறன் - என்று சொல்கிறார்கள். வயது கூடினால் தான் இந்த எதிர்ப்புத் திறன் வரும். அதிலும், ஒரே வயதைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெண்களுக்கு இந்த எதிர்ப்புத்திறன் ஆண்களைவிட அதிகம் என்று மனோதத்துவ பரிசோதனைகள் நிரூபிக்கின்றன. எனவே, டீன் எஜ் பருவத்தில் யாருடன் நட்பு வைக்கவேண்டும் என்பதை இளைஞர்களிடம் முழுதாக விட்டுவிடக் கூடாது. ஆனால், முழுதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தீர்களானால், மேலே உள்ள ஒன்பது விஷயங்களை மீண்டும் படிக்கலாம்.